நாய்கள் கடித்து குதறியதால் ஆடுகள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடபாதிமங்கலம் பகுதியில் வசித்துவரும் கிராமப்புற மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதற்காக ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகளை வழக்கம்போல் காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். அப்போது காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள தரிசு நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை அங்கு சுற்றித் திரிந்த 5-க்கும் மேற்பட்ட நாய்கள் விரட்டி கடித்துக் குதறியுள்ளது. இதனால் காயமடைந்த ஆடுகளை சாத்தனூர் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற போது 5 ஆடுகள் அங்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தது.
இதுகுறித்து ஆட்டின் உரிமையாளர்கள் கூறும்போது காயமடைந்த 6 ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்து வருகிறார். மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் ஆடுகளை வேட்டையாடும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.