மாவட்ட கலெக்டரிடம் பேருந்து வசதி கேட்டு கோவிந்தசாமி எம்.எல்.ஏ மனு கொடுத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ கோவிந்தசாமி கலெக்டர் சாந்தியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார். அதில் கூறியதாவது, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தல்மலை கிராமத்தில் 600 குடும்பங்களும், பால் சிலம்பு கிராமத்தில் 170 குடும்பங்களும் என மொத்தமாக 770 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் 16 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதன்பின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி 10.5 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைத்துக் கொடுத்துள்ளார்.
இதனை அடுத்து மலை கிராமத்தில் கால்நடை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவை கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் வத்தல் மலையில் இருக்கும் பால்சிலம்பு கிராமத்தில் இருந்து பொதுமக்கள் தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றிற்கு 80 கிலோ மீட்டர் தூரம் செல்லும் நிலை இருந்து வருகிறது.
பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு இதுவரை வத்தல்மலைக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்த நிலையில் கிராமங்களுக்கு பேருந்து விட வேண்டும் என சட்டமன்றத்தில் பலமுறை நான் கோரிக்கை வைத்ததால் பேருந்து சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. எனவே இனி மேலும் காலம் கடத்தாமல் வத்தல்மலைக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தருமாறு மனு அளித்ததாக கூறியுள்ளார்.