மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற முறைகேடு குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்பில் உள்ள காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி தங்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்கக்கோரி மருத்துவர்கள் அரவிந்த், கீதாஞ்சலி, சந்தோஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி திரு ஆனந்த் வெங்கடேஷ் தகுதியில்லாத விண்ணப்பதாரர்களுக்கு மாணவர் சேர்க்கை வழங்குவதை தொடர அனுமதித்தால் அது தகுதியான மாணவர்களுக்கு அநீதி செய்வதற்கு சமம் என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களையும், புள்ளிவிவரங்களையும் பார்க்கும்போது கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு என்ற விபரங்கள் வெளிச்சத்திற்கு வரும் எனக் கூறினார். மேலும் இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக டிஜிபிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விசாரணை குறித்த அறிக்கையை ஜனவரி 30ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் பிப்ரவரி 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.