விருதுநகரில் தரமற்ற தண்ணீரால் ஏற்பட்ட சிறுநீரக கல் பிரச்சனை ஏற்பட்டு பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள 450க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மக்கள் நிலத்தடி நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகமானது பல கிராமங்களுக்கு செய்யப்பட்டு வந்தாலும் , இன்னும் ஒரு சில கிராமங்களில் மக்கள் நிலத்தடி நீரையே குடிநீர் ஆதாரமாக நம்பி உள்ளனர்.
இந்நிலையில் பாவாலி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சீனியாபுரம், சொக்கலிங்கபுரம், சந்திரகிரி உள்ளிட்ட கிராமங்கள் நிலத்தடி நீரையே குடிநீராக பருகி வந்த சூழ்நிலையில் அதன் காரணமாக பலர் சிறுநீரக கற்கள் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 20க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக கல் பிரச்சனைக்காக தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆகையால் மேலும் உயிரிழப்புகளை தவிர்க்கவும், பெரும் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் தடுக்கும் வகையிலும், விரைந்து தரமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாவாலி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.