வடகொரியாவில் மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபலமான ஆப்பான Netflix-ல் தற்போது Squid Game என்ற தொடர் வெளியாகியது. இது உலகில் பல்வேறு தரப்பினர் இடையில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் வடகொரியாவில் இதுபோன்ற தொடர்புகள் பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி மாணவன் ஒருவர் USB டிரைவில் பதுக்கி வைத்து அதன் நகல்களை சக மாணவர்களுக்கு விற்றதாக பிடிபட்டார். இதனால் பிடிபட்ட மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபல ஆங்கில ஊடகம் RFA வெளியிட்டிருக்கும் செய்தியில் “பிடிபட்ட மாணவனுக்கு துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் இத்தொடரை ரகசியமாக பார்த்த மேலும் 7 மாணவர்களும் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தொடரின் நகலை வாங்கியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதனை பார்த்த அவருடைய 5 நண்பர்களுக்கும் கடின வேலை செய்வது தொடர்பான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாட்டில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு ஊடகங்களைக் கண்டறிய அதிகாரிகள் அங்கிருக்கும் பள்ளிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனெனில் வடகொரியாவில் இந்த தொடரை மக்கள் ரகசியமாக பார்த்து வருவதாக செய்தி வெளியான நிலையில் இந்த சோதனை வேட்டை தொடங்கியுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம் திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் இசை போன்ற மேற்கத்திய பொருட்களின் வருகையை ஒடுக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதில் சிக்கியவர்களுக்கு கடுமையான அபராதம், 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது மரண தண்டனை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.