தென்னை நார்த் தொழிற்சாலையிலுள்ள குழியில் விழுந்து 9 – ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 – ஆம் வகுப்பு படித்து வந்த கேசவன் என்ற மகன் இருந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு நெடுநாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கேசவன் தென்னை நார் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் கேசவன் வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்குள்ள நார்க்கட்டி குழியில் எதிர்பாராதவிதமாக கேசவன் தவறி விழுந்து விட்டார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கேசவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையறிந்த கேசவனின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கேசவன் இறந்து விட்டதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து உடுமலை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கேசவனின் உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து கேசவனின் தந்தை உடுமலை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் பாதுகாப்பற்ற முறையில் பணி செய்ய அனுமதித்த தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தென்னைநார் தொழிற்சாலையின் உரிமையாளர் கந்தர்மணி, சூப்பர்வைசர் சிவகுமார், ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.