நாகர்கோவிலில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையில் போலீஸ்கார கணவர் மாமியார் வீட்டில் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் ஆட்லின் ரிபா (33) என்பவர். இவருக்கும் குலச்சல் பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்து தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆட்லின்ரிபாவின் கணவர் நெல்லை மாவட்டத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆட்லின் ரிபா தன் குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது கணவர் தன் மாமியார் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது மாமியார் அவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் மாமியார் வீட்டிற்கு தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். தீ கொழுந்து விட்டு எரிந்தது. வீட்டிலிருந்த அனைவரும் வெளியே ஓடி வந்தனர். அதன்பின் அவர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த கட்டில் மற்றும் மின்சாதன பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடசேரி போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ்கார கணவன் தாக்கியதில் காயமடைந்த ஆட்லின்ரிபாவை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர்.அப்போது அவர் சம்பவம் நடந்த போது தனது கணவர் குடிபோதையில் இருந்ததாக கூறினார். போலீஸ்கார கணவர் மாமியார் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.