மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்ணன்டஅள்ளி பகுதியில் அஜித் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் காகன்கரை-மாடராஅள்ளி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திடீரென தவறிக் கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித்துக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.