17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்காடு கிராமத்தில் சர்தார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் உள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் தாயார் தனது மகளை காணவில்லை என ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையம் அம்மன் கோவிலில் விக்னேஷ் அந்த சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. அதன்பிறகு ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இந்த வழக்கானது மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து திருவள்ளூர் பகுதியில் விக்னேஷ் மற்றும் அந்த சிறுமியை போலீசார் மீட்டனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விக்னேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். அதோடு மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு சிறுமியை அவரது தாயிடம் ஒப்படைத்து விட்டனர்.