”முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம்” என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
மே மாதம் 19 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது பள்ளபட்டி அண்ணா நகரில் பேசும்போது ,” சமரச , சமமான இந்தியாவாக, மூவர்ணக் கொடியில் மூன்று வர்ணங்களும் அப்படியே இருக்கும் இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதுதான் நல்ல இந்தியரின் ஆசை” என்றும் ,இதற்கு எதிரான போக்கு காந்தி கொலையிலிருந்தே தொடங்குகிறது என்றும் கமல்ஹாசன் பேசினார்.
மேலும் சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான் எனவும் சாடினார் . இதனால் பல்வேறு விமர்சனத்துக்கு கமல் உள்ளாகியுள்ளார் .பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இது பற்றி கூறுகையில் , ‘‘முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம்” என்றும் , முஸ்லிம் ஓட்டுக்காக இந்துக்களை இழிவு படுத்தும் செயலைப் பாருங்கள் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கமலஹாசனால் 1 சதவீத வாக்குகள் கூட வாங்க முடியாது என்றும், அவர் கடுமையாக கமலை சாடியுள்ளார் .