தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பிற்கான மின்கட்டணத்தை செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
ஜூன் 6ம் தேதி வரை தாமத கட்டணம், மறுமின் இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வீடுகள், நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் எனக்கூறி ராஜசேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு காணொலி மூலம் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபொழுது, மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மின்கட்டணம் செலுத்துவதறகான கால அவகாசத்தை ஜூன் 6ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜூன் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.