புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு நேற்று உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஏற்கனவே ஊரடங்கில் சில கட்டுப்பாடு தளர்வுகளை அறிவித்திருந்த மத்திய அரசு, நேற்றும் சில ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது.
அதன்படி பல்வேறு மாநிலங்களவை அங்கிருக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் நாளை முதல் தனிமனித இடைவெளியுடன் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், ஆலைகள், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கவும் அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறந்து மது விற்பனை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. முன்னதாக கர்நாடக மாநிலத்திலும் பேருந்து சேவைகள் மற்றும் ரயில் சேவைகள் இயங்க அனுமதி அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.