தமிழகத்தில் எல்.ஜி. பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை குறிப்பிடுவது குறித்து சொற்களஞ்சியம் தயாரிப்பது தொடர்பான வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஊடகங்களில் எல்.ஜி.பி.டி.கியூ.ஐ.ஏ பிளஸ் சமுதாயத்தில் அளித்த சொற்களஞ்சியத்தை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சுருக்குவது குறித்து சொற்பியல் மற்றும் அகராதித்துறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சொற்களஞ்சியம் உருவாக்கப்பட்டு முதல்வருக்கு அனுப்பி வைத்து தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் அதற்காக 4 வார கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனைப் போல பள்ளி குழந்தைகளுக்கு இப்பிரிவினர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய வகையில் ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பயிற்சி வழங்கப்பட்டு அதன் விவரங்கள் அடுத்த விசாரணையின் போது அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு விதிகள் மற்றும் கொள்கை வகுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, எல்.ஜி.பி.டி. க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமுதாயத்தினரை குறிப்பிடும் சொற்களஞ்சியத்தை 4 வாரங்களில் வெளியிட வேண்டும் என்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமை பாதுகாப்பு விதிகள் மற்றும் கொள்கைகள் இறுதிச் செய்ய நான்கு வாரம் கால அவகாசம் வழங்கி விசாரணை ஆகஸ்ட் 22ஆம் தேதி தள்ளி வைத்தனர். அதனைப் போல பாலின மற்றும் அறுவை சிகிச்சை செய்வதை தொழில் ரீதியான தவறான நடத்தை என அறிக்கை வெளியிடுவது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.