தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் அருகே சொர்க்கம் கோம்பை வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் தேனி எம்.பி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வனத்துறையினரால் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலியல் திடீரென சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது. இதைப்பார்த்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையை மீட்பதற்காக போராடினர்.
ஆனால் சிறுத்தை தானாகவே சோலார் மின்வேலியை விட்டு வெளியே வந்ததுடன் வனத்துறை ஊழியர் ஒருவரையும் கையில் கடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. அதன் பின் காயமடைந்த வனத்துறை ஊழியரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்தது. இது குறித்த தகவலின் பேரில் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தையை அங்கே பிரேத பரிசோதனை செய்து குழி தோண்டி எரித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சோலார் மின்வேலியில் சிக்கிய புலி மீண்டும் அதே மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது வனத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அங்கு தற்காலிகமாக ஆட்டுமந்தை அமைத்திருந்த விவசாயி அலெக்ஸ் பாண்டியன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் தோட்டத்தின் உரிமையாளர் எம்.பி ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆட்டுமந்தை அமைத்திருந்த விவசாயி மீது நடவடிக்கை எடுத்தது அப்பகுதி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.