தயா இன்ஜினீயரிங் கல்லூரிக்காக கோயில் இடங்களை ஆக்கிரமித்த வழக்கின் விசாரணைக்காக மு.க. அழகிரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை அடுத்த மேலக்கோட்டை பகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனுமாகிய மு.க.அழகிரி அவரது மகன் துரை தயாநிதி பெயரில் தயா இன்ஜினீரிங் கல்லூரியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் சிவரக்கோட்டையைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் தயா இன்ஜினியரிங் கல்லூரி கட்டுவதற்காக விநாயகர் கோவில் இடத்தை ஆக்கிரமித்ததாக அழகிரி மீது புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அழகிரி, சம்பத், ஆதிலெட்சுமி, சேதுராமன், சதீஷ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் வழக்கானது இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட அழகிரி, சம்பத், சேதுராமன், சதீஷ்குமார் ஆகிய 4 பேரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும் மு.க.அழகிரி எம்பியாக இருந்தசமயத்தில் தனது வேட்புமனு சொத்துக்களை கணக்கில் காண்பிக்காத காரணத்திற்காக அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் என்பவர் தொடர்ந்த மற்றொரு வழக்கிலும் இன்று மு.க.அழகிரி ஆஜரானார். இந்த இரண்டு வழக்கையும் விசாரித்த மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை நவம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பளித்தது.