ஆந்திராவிற்கு வேலைக்கு சென்ற தனது கணவரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது மனைவி தனது குழந்தைகளுடன் துணி வியாபாரி வீட்டின் முன்பு போராடினார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள குத்தம் பள்ளி என்ற பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு டீக்கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திருபத்தூரில் வசித்து வரும் ஜவுளி வியாபாரி புருஷோத்தமன் என்பவர் துணி வியாபாரத்தில் நிறைய லாபம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைக் கூறி வெங்கடேசனை விஜயவாடாவுக்கு கடந்த மாதம் 14ஆம் தேதி அழைத்து சென்றிருக்கிறார். இதனையடுத்து செல்போனில் தனது மனைவியிடம் பேசிய வெங்கடேசன் தனக்கு சரியாக உணவு வழங்காமல் கொடுமைப்படுத்துவதாக கூறி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அஞ்சலி, கடந்த மாதம் 31ஆம் தேதி விஜயவாடாவுக்கு சென்று வெங்கடேசனை திரும்ப ஊருக்கு அழைத்து வந்துவிட்டார். இந்நிலையில் திடீரென வெங்கடேசன் இறந்ததால், தனது கணவரின் சாவுக்கு நியாயம் கேட்டு துணி வியாபாரி புருஷோத்தமனின் வீட்டிற்கு முன் தனது கணவர் வெங்கடேசனின் உடலை வைத்து நியாயம் கேட்டு அவரது வீட்டை முற்றுகை இட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருப்பத்தூர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்து வெங்கடேசனின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் அஞ்சலி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.