மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள திரவிய நகர் பகுதியில் பொன்னுத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முக்கூடலில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது இவர்கள் மாதாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறிய அவர்களது மோட்டார் சைக்கிள் ரோட்டில் தாறுமாறாக சென்றுள்ளது. அப்போது இவர்களின் பின்னால் வடகரை பகுதியில் வசித்து வரும் பதுர்தீன் என்பவரின் மோட்டார் சைக்கிள் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது.
இதில் படுகாயமடைந்த கமலத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.