குழந்தை இல்லாத விரக்தியில் கணவன் பேசாமல் இருந்ததால், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாடம்பாக்கத்தில் ஹேமாவதி என்பவர் வசித்துவருகிறார். இவர் சிறுசேரி பகுதியிலுள்ள ஒரு சாப்ட்வேர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இதனால் தனது தாயுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கம்ப்யூட்டர் நிறுவன ஊழியரான தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு காலனியில் வசிக்கும் கார்த்திக் என்பவரை இரண்டாவதாக திருமண செய்துள்ளார். இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி அவரது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் ஆன்லைன் திருமண தகவல் விளம்பரத்தின் மூலம் திருமணம் செய்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு குழந்தைகள் பிறக்கவில்லை. இதனையடுத்து திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர். இதனால் வருத்தமடைந்த கார்த்திக் ஹேமாவதியிடம் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், மாடம்பாக்கத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு ஹேமாவதி சென்றுவிட்டார்.
அதன்பின் அவரது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ஹேமாவதி தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக அவரின் தாயார் சாந்தி, சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் ஹேமாவதியின் சாவுக்கு அவரது கணவரின் கொடுமையே காரணம் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சேலையூர் போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ திருமணமான இரண்டே ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.