சாலையில் அடிபட்டு கிடந்த குரங்கின் உயிரை காப்பாற்றிய நபரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் செம்பாகுறிச்சி மற்றும் அனுமனந்தல் ஆகிய கிராம எல்லைப்பகுதியில் வீ. கிருஷ்ணாபுரம் காப்புக்காடு அமைந்திருக்கிறது. இங்கு இருக்கும் குரங்குகளுக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பழங்கள் மற்றும் உணவுகளை வழங்கி செல்கின்றனர். இதனால் உணவுக்காக குரங்குகள் காப்பு காட்டை விட்டு வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி திரிவதை காணமுடிகின்றது.
இதனையடுத்து சாலையில் சுற்றி திரிந்த ஒரு குரங்கின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் அடிபட்ட குரங்கு சாலையோரத்தில் மயங்கி கிடந்ததைப் பார்த்த பிரபு என்பவர் அங்கிருந்து குரங்கை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குடிநீர் குழாய்க்கு சென்று தண்ணீர் கொடுத்து காயப்பட்ட இடத்தை சுத்தம் செய்துள்ளார். பின்னர் அந்த குரங்குக்கு மயக்கம் தெளிந்துள்ளது. இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த பிரபு குரங்கை காப்புக்காடு அருகில் கொண்டு சென்று விட்டுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.