சாலையோரம் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதிக்கு அருகே உள்ள சீத்தூரணி சாலை ஓரங்களில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இவ்வாறு குப்பைகள் ஆங்காங்கே சுத்தப்படுத்தாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனையடுத்து நடைபயிற்சி செய்பவர்கள், குழந்தைகள், அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும் மக்கள் ஆகிய அனைவரும் அந்த வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். இதனால் அந்த சாலையோரம் செல்லும் சிறிய குழந்தைகள் உட்பட அனைவருக்கும் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது.
மேலும் சீத்தூரணி சாலை ஊராட்சிக்கு மிகவும் தொலைவில் உள்ளதால் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றாமல் விட்டுவிடுகிறார்கள். இதனால் அந்தப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காற்றினால் குப்பைகள் பறந்து சென்று மற்ற இடங்களையும் அசுத்தப்படுத்துகிறது. எனவே அப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.