மாவட்டத்தில் 2 வாரங்களுக்கு காவல்துறையினர் வழக்குகள் ஏதும் பதிய வேண்டாம் என்றும், பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து, சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.. தந்தை, மகன் இருவரையும் கொலை செய்த காவல் துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, காவல் நிலையங்களில் காவல் துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தும் வகையில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள், பெரிய அளவில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை செய்பவர்களை மட்டும் கைது செய்தால் போதும்.. இன்னும் 2 வாரத்திற்கு காவல் துறையினர் பொதுமக்களிடம் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353ன் படி கைது செய்யப்படும் நபராக இருந்தால் அவரை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லக்கூடாது. அருகிலுள்ள வேறு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று தான் விசாரிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு மிகவும் ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசாதீர்கள்.. அவர்களிடம் மிகவும் கனிவுடன் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும். காவல் துறையினர் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்கிறோம்.. ஆனால் சாத்தான்குளம் கொலை சம்பவத்திற்குப் பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் பொதுமக்கள் காவல் துறையினரைப் பார்க்கும் கண்ணோட்டம் முற்றிலும் மாறி இருக்கும். எனவே காவல்துறையினர் யாரையும் தரக்குறைவாகப் பேசாமல் அன்பாக பேசி பிரச்சனையை விளக்க வேண்டும். காவல் துறையினருக்கு ஆன்லைன் பயிற்சி முகாம் நடக்கவுள்ளதால், அதில், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.