குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்வதால் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாநகர பகுதியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாநகர் பகுதி முழுவதிலும் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகரின் அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டது. இங்கு ஏற்கெனவே இருந்த தொட்டிகளில் நீரேற்றம் செய்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வீடு, அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கும் இந்த குடிநீர் திட்ட குழாய்கள் பொருத்தும் பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் குடிநீர் வசதிக்காக சாலைகளில் குழிதோண்டி புதைக்கப்பட்டு உள்ள குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு அங்குமிங்குமாக தண்ணீர் ஆறு போல் வீணாக ஓடுவது தினசரி வாடிக்கையாக இருக்கின்றது.
அதன்படி பவானி ரோடு, வ.உ.சி.பூங்கா அருகில் சாலையில் குடிநீர் வீணாக ஓடி வெள்ளம் போல் தேங்கி காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொண்டனர். இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியபோது ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் ஊராட்சிக்கோட்டை திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விரைவில் வழங்கப்பட இருக்கின்றது. இங்கு ஏற்கனவே சுமார் 40 ஆயிரம் இணைப்புகள் கொடுக்கப்பட்டு வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆகவே மீதமுள்ள இணைப்புகள் அனைத்தும் 3 மாதங்களில் வழங்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து குழாய்களில் சோதனை ஓட்டம் நடைபெற்று வரும்போது சில பகுதிகளில் ஏற்படும் உடைப்புகள் உடனடியாக சரி செய்யப்பட்டு வருகின்றது. இந்த உடைப்பு வ.உ.சி.பூங்கா பகுதியில் குழாய் வால்வுகள் பிரச்சனையால் ஏற்பட்டுள்ளது. இவை உடனடியாக சரி செய்யப்படும் என்று வடிகால் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார். இவ்வாறு இங்கு அடிக்கடி குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதால் அதிகாரிகள் நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .