கோவில் உண்டியலை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பூதாமூர் பூந்தோட்டம் நல்லேரிக்கரை திரவுபதி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலில் பூசாரியாக அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் பூஜைகளை முடித்துவிட்டு, கோவிலை பூட்டிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கோவிலின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலில் இரும்புக் கம்பிகள் மூலமாக பெயர்த்தெடுத்து வெளியே எடுத்து சென்றுள்ளனர்.
இதில் இருந்த காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை அடுத்து கொள்ளை சம்பவத்தின் போது கொள்ளையர்கள் தாங்கள் கொண்டு வந்த இரும்பு கம்பி மற்றும் ஒரு ஜோடி செருப்பை கோவில் வளாகத்தில் விட்டு சென்றுள்ளனர். பின்னர் கோவிலுக்கு வந்த செல்வராஜ் கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்ததில் உண்டியல் காணாமல் போனது தெரியவந்துள்ளது.
இது பற்றி செல்வராஜ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளையர்கள் விட்டுச் சென்ற பொருட்களை கைப்பற்றி உள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.