கோவில் சொத்துக்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை குத்தகை தொகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அமைந்துள்ள கொங்கு வேளாளர் மேல்நிலைப்பள்ளி, அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான 4.02 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து செயல்படுகிறது.
இந்நிலையில் இந்த நிலத்திற்கு குத்தகை தொகை பற்றி கோவில் செயல் அலுவலர் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி அன்று அந்தப் பள்ளிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
இதனை விசாரித்த நீதிபதி எஸ். எம். சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது என்னவென்றால், குத்தகை நிர்ணய நோட்டீசை எதிர்த்து பள்ளி நிர்வாகம் அளித்துள்ள ஆட்சேபணைகளை 8 வாரத்திற்குள் அறநிலையத்துறை ஆணையர் பரிசீலனை செய்ய வேண்டும்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள் அனைத்தும் குத்தகைக்கு நியாயமான வாடகை நிர்ணயிக்க வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் அறநிலையத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை குத்தகை தொகையானது மாற்றி அமைக்க வேண்டும். இந்த நடைமுறையை இந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.