பவானிசாகர் அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதால் காலிங்கராயன் தடுப்பணை நிரம்பி வழிந்தது.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியை நெருங்கும் நிலையில் இருக்கின்றது. இதன் காரணமாக இந்த அணையிலிருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடிக்கு மேற்பட்ட அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள காலிங்கராயன் தடுப்பணை நிரம்பி தண்ணீரானது செல்கிறது. அவ்வாறு செல்லும் தண்ணீரானது பவானியில் உள்ள கூடுதுறையில் காவிரி ஆற்றுடன் கலந்து விடுகிறது. மேலும் காலிங்கராயன் வாய்க்காலில் இருந்து பாசனத்துக்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழையினால் இந்த வாய்க்காலில் இருந்து வினாடிக்கு 400 கனஅடியாக குறைந்து தண்ணீரானது திறக்கப்பட்டது.