இரண்டாம் கட்டமாக முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் போடும் பணி இந்தியாவில் தொடங்கியுள்ளது. இதில் முதல் கட்டமாக டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், காவல்துறையினர் போன்றோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பேரில் தடுப்பூசி போடுவதற்காக முதியவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் அல்லது நேரடியாக மருத்துவமனைக்குஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர். அதன்படி ஈரோட்டில் 24 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 42 தனியார் ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு சக்கரையின் அளவு சரிபார்க்கப்பட்ட பின்னரே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி போடப்பட்ட முதியவர்கள் 1/2 மணிநேரம் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த தடுப்பூசி அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாகவும் தனியார் ஆஸ்பத்திரிகளில் ரூபாய் 250 கட்டணமாக வசூலிக்கப்பட்டும் போடப்பட்டுள்ளது.