வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ உலகநாதன் தலைமை தாங்கினார். திமுக நகர செயலாளர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் சாமிநாதன், ம.தி.மு.க. நகர செயலாளர் கோவி. சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் போராட்டம் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் சுந்தர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜா, விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் அமிர்தலிங்கம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதேபோன்று திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்திற்கு தொழிற்சங்கத்தின் கிளை தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். அந்தப் போராட்டம் ஏழை தொழிலாளர்கள் அனைவருக்கும் நிவாரணமாக 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. மேலும் வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.