ஜாதி மத பேதம் கடந்து கொண்டாடப்படும் ஓணம் திருநாளின் முழுவரலாற்றை இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
கேரள மக்களின் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கேரளாவில் கடந்த 10 நாட்களாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழகத்தில் அதற்கான கொண்டாட்டங்கள் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றன. ஆவணி மாதத்தில் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் திருவோணத் திருவிழா சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம் என பத்து நட்சத்திர நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மிகவும் விசேஷமாக கொண்டாடப்படும் கடைசி நாளான திருவோணத்தன்று தனது மக்களை தேடி வரும் மகாபலி மன்னரை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலம் போட்டு புத்தாடைகள் அணிந்து இனிப்புகள் பரிமாறி மகிழ்ச்சியுடன் தினத்தை கொண்டாடி வருவார்கள். அன்பை பரிமாறி கொண்டாடப்படும் இந்த ஓணம் பண்டிகை வரலாறு குறித்து தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்,
எலிக்கு வரம் அளித்த சிவபெருமான்:
முன்னொரு காலத்தில் சிவாலயத்தில் இருந்து கொண்டிருந்த விளக்கின் திரியைத் தூண்டி பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது ஒரு எலி. எனவே அந்த எலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். அந்த எலியானது மறு பிறப்பில் மகாபலி என்ற பெயருடன் மன்னனாக பிறந்து மூவுலகையும் சிறப்பாக ஆட்சியும் புரிந்தான். எலி மகாபலி மன்னனின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
அசுரகுல மகாபலி மன்னன்:
அசுர குலத்தின் வாரிசான மகாபலி மன்னனின் வளர்ச்சியை கண்ட தேவர்கள் மகாபலி மன்னனுடன் போரிட்டனர். போரில் அசுர குலம் ஜெயிக்கவே தேவர்குலம் பயந்து திருமாலிடம் முறையிட, அவர்களின் மகனாக அடைய வேண்டி காசிப முனிவரின் மனைவி திதி என்பவள் வரம் கேட்க, அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்தார் திருமால். அசுர குலத்தில் பிறந்த போதிலும் தானம், தர்மம் செய்வதிலும், யாகங்கள் நடத்துவதிலும் மகாபலி மன்னன் சிறந்தவனாக விளங்கினான்.
திருமாலின் வாமன அவதாரம்:
அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த வாமனன் மகாபலியின் அரண்மனைக்குச் சென்று மூன்றடி மண் தானமாக கேட்டார். வந்திருப்பது கடவுள் அவதாரமான வாமனன் என்பதை அறிந்த அசுரகுருவான சுக்கிராச்சாரியார் தானம் தர ஒப்புக்கொள்ள வேண்டாமென மகாபலி மன்னனிடம் கேட்டுக்கொண்டார். இறைவனே தம்மிடம் கையேந்தி நிற்பதை அறிந்த மகாபலி மன்னன் குரு சொன்னதை கேளாமல் மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டாராம்.
பாதாளம் சென்ற மகாபலி மன்னன்:
உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால் ஓரடியால் பூலோகத்தையும் மற்றொரு அடியால் தேவலோகத்தையும் அளந்து மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்றுக் கூற மகாபலி மன்னன் தனது மூன்றாவது அடியை தனது சிரத்தில் அளக்குமாறு கூறினார். அதன்படி அவன் சிரம் மீது கால்வைத்து அழுத்த அவன் பாதாள லோகத்திற்கு சென்றானாம். அந்த சமயத்தில் மகாபலி சக்கரவர்த்தி வாமனனிடம் தான் ஆண்டுக்கு ஒருமுறை மக்களை வந்து பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டான்.
ஓணம் கொண்டாட்டம்:
அதற்கு வாமனன் வரம் அளித்தாராம். அதன்படி மகாபலி சக்கரவர்த்தி காண வரும் நாள் தான் இந்த ஓணம் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தங்களை காண வரும் மன்னனை வரவேற்க தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காட்டவும், மலையாள மக்கள் வாசலில் அத்த பூ கோலமிட்டு அதில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இந்த திருநாளில் கேரள மக்களை காண வரும் மகாபலி மன்னன் ஆசீர்வாதங்களையும், செல்வங்களையும் வாரி வழங்குவார் என்பது ஐதீகம். இந்த ஓணம் சத்ய விருந்தில் என்ன சிறப்பு என்றால் ஓணம் சத்ய விருந்து என்று கூறுவார்கள்.
ஓணத்தின் சிறப்புகள்:
இந்த திருவோண நாளன்று கேரள மக்களால் உறவுகளுக்கும் நட்புகளுக்கும் அன்போடு உணவு பரிமாறப்படுகிறது. கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகளான அவியல், பச்சடி, மாங்காய்ப் பச்சடி, கூட்டு கறி, கூட்டு ஆகியவை தலைவாழை இலை போட்டு பரிமாறப்படுகிறது. இத்துடன் சக்கரைவள்ளி கிழங்கு, விளம்பி, சாதத்தில் பருப்பு போட்டு நெய் சேர்த்து அப்பளம் வைத்து சாப்பிடுகிறார்கள். பின் சாம்பார் உண்டு பிரதமன் எனப்படும் பாயாசத்தை சுவைத்துவிட்டு இறுதியாக மோர் கூட்டு சேர்த்து சாப்பிட்டு முடிக்கும் பட்சத்தில் வயிறும், மனமும் நிறைந்து விடும் என்பது கேரள மக்களின் வழக்கம்.
மாலைப் பொழுதுகளில் பெண்கள் ஓணம் சேலை கட்டிக்கொண்டு கோலத்தை சுற்றி கும்மி கொட்டி வீட்டு வாசலில் ஊஞ்சல் கட்டி பந்துகள் விளையாடி மகிழ்ச்சியுடன் ஓணத்தை கொண்டாடுகின்றனர். இதையடுத்து மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை அறிந்த மகாபலி மன்னனும் அவர்களுக்கு ஆசிகளை வழங்கி விட்டு மீண்டும் பாதாள உலகம் சென்று விடுவார் என்பது வரலாறு.
புதுமண தம்பதிகள் இந்த நாளில் தலை தீபாவளி போன்று தலை ஓணம் என்று கொண்டாடுகிறார்கள். கேரளா மட்டுமின்றி மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் தமிழகம் கர்நாடகம் ஆந்திரம் போன்ற அண்டை மாநிலங்களிலும் கூட இந்த ஓணம் கொண்டாடப்படுகிறது. ஜாதி மத பேதம் கடந்து கொண்டாடப்படும் இந்த நன்னாளில் நாமும் நம் வாழ்த்துக்களை கேரள மக்களுக்கு தெரிவித்துக் கொள்ளலாம்.