கட்டிட தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பகுதியில் ஒரு ஆணின் சடலம் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த ஆண் கொலை செய்யப்பட்டார ? இல்லை தற்கொலை செய்து கொண்டாரா ? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அந்த இறந்து கிடந்த நபர் கணேசபுரத்தில் வசித்த கட்டிட தொழிலாளியான செந்தில்குமாரின் என்பது தெரியவந்தது. இவருக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும் 3 மகன்களும் இருக்கின்றனர்.
கடந்த ஜுலை 10 – ஆம் தேதியன்று இரவு நேரத்தில் வெளியில் சென்று செந்தில்குமார் வீடு திரும்பவில்லை. அதன்பின் செந்தில்குமாரை பிணமாக கண்டெடுத்த சம்பவம் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் செந்தில்குமாருக்கும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் சத்யா நகரில் வசிக்கும் நாகராஜ் என்பவருக்கும் குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு கைகலப்பாக மாறி நாகராஜ் என்பவர் கட்டையால் செந்தில் குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் காவல்துறையினர் நாகராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.