தண்ணீர் தொட்டியில் இருந்து வாலிபர் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள வீரப்பன்சத்திரம் கலைவாணர் வீதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு குமரகிரி என்ற மகன் இருந்துள்ளார். இவர் பி.எஸ்சி படித்துள்ளார். இதில் குமரகிரி வேலைக்கு செல்லாமல் இருந்ததால் பெற்றோர் அவரை கண்டித்து வந்துள்ளனர். இந்நிலையில் குமரகிரி வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் சாலை வழியாக நடந்து சென்றபோது குடிபோதையில் இருந்ததாக தெரிகின்றது. அப்போது திடீரென அங்குள்ள ஒரு தண்ணீர் தொட்டி வளாகத்துக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அருகிலிருந்த படிக்கட்டு வழியாக குமரகிரி வேகமாக தண்ணீர் தொட்டியின் மேல் ஏறினார்.
அதன்பின் சுமார் 50 அடி உயரமுள்ள அந்த தண்ணீர் தொட்டியின் உச்சிக்கு மேல் நின்று குமரகிரி குதிக்க முயற்சி செய்துள்ளார். அதனை கண்ட பொதுமக்கள் சிலர் அங்கு திரண்டு வந்து குமரகிரியை கீழே இறங்கி வருமாறு அறிவுறுத்தினர். ஆனால் குமரகிரி சட்டென தண்ணீர் தொட்டியின் மேல் இருந்து கீழே குதித்ததனால் அங்கிருந்த பலகையின் மீது விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அருகிலிருந்தவர்கள் குமரகிரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.