கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.
அதன்படி உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 10 நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. அதன்பின் உக்ரைனில் 10 நாட்களாக போர் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், உக்ரைன் மக்களும், அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் போர் நடக்கும் இடங்களில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற உதவும் வகையில் தற்காலிகமாக தாக்குதலை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் துணை ராணுவப்படையில் கோவையை சேர்ந்த இளைஞர் சேர்ந்துள்ளார். கோவை துடியலூரை சேர்ந்த சாய் நிகேஷ் என்பவர் 2018 முதல் உக்ரைனில் விமானவியல் துறை படித்து வந்துள்ளார். தற்போது உக்ரைனில் நடைபெறும் போரால் அங்கு உள்ள ஜார்ஜியன் நேஷனல் லிஜியன் என்னும் துணை ராணுவப் படையில் அவர் சேர்ந்துள்ளார். இது குறித்து இந்திய உளவுத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. சிறுவயது முதலே இந்திய ராணுவத்தில் சேர விரும்பிய சாய் நிகேஷ் உயரம் குறைவால் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.