தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய கடலோர பகுதி மற்றும் அதைச்சுற்றியுள்ள தெற்கு கடலோர பகுதிகளில் நீட்டித்துள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்படி தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்களிலும், புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் இன்று மற்றும் நாளை மிகக் கனமழை பெய்யும். கன்னியாகுமரி, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி. தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.