ஜாமினில் வெளியில் வர இருந்த கைதி திடீரென உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு அம்மைபிள்ளை தெரு பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்தார். இதில் கார்த்திக்கிற்கு திருமணம் முடிந்து நீலா என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்களில் கார்த்திக் மீது காவல் நிலையத்தில் அடிதடி, லாட்டரி சீட்டு விற்பனை வழக்குகள் இருக்கிறது. இந்த வழக்குகளில் கடந்த 17-ஆம் தேதியன்று கார்த்திக் கைது செய்யப்பட்டதோடு ஆத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து சிறையிலிருந்த கார்த்திக்கிற்கு ஜாமீன் பெற அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்தனர்.
அதன்படி அவருக்கு ஜாமீன் கிடைத்ததாக இரவு நேரத்தில் ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் கார்த்திக் ஜாமினில் வீட்டுக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டு இருந்தார். அவரை வரவேற்பதற்காக மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் தயாராக இருந்தனர். இதில் கார்த்திக்கும் மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க போகும் மகிழ்ச்சியில் இருந்தார். இந்நிலையில் திடீரென கார்த்திக் தனக்கு நெஞ்சு வலிப்பதாக அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அதிகாரிகள் கார்த்திக்கை போலீஸ் பாதுகாப்புடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு கார்த்திக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இவ்வாறு ஜாமீனில் வர இருந்த நிலையில் கார்த்திக் இறந்ததால் அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் கருதினர். இதன் காரணமாக கார்த்திக் உடல் ஆம்புலன்சு மூலம் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே திடீரென கார்த்திக்கின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆம்புலன்சை வழிமறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் உறவினர்கள் காவல்துறையினரை கண்டித்தும், கார்த்திக்கின் இறப்பில் மர்மம் இருப்பதால் உரிய விசாரணை மேற்கொண்டு நீதி கிடைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதனை அறிந்த போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் மற்றும் காவல் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அப்போது கார்த்திக் இறப்பு குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருவதாகவும், உங்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தனர்.
இந்த நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் அவர்கள் சமாதானம் அடைந்து ஆம்புலன்சை விடுவித்தனர். அதன்பிறகு கார்த்திக்கின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சாலை மறியலால் சுமார்3/4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி கார்த்திக்கின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதால் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.