தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டாம் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பல திரைப் படங்கள் ஓடிடி தளங்களில் வெளியானது . இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது . இதையடுத்து விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை இணையத்தில் வெளியிடக் கூடாது என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் மாஸ்டர் திரைப்படம் முதலில் திரையரங்கில் வெளியாகி பின்னர் ஓடிடியில் வெளியானது.
தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது . இந்நிலையில் தனுஷின் ரசிகர்கள் ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கும் வகையில் ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர் . அதில் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு அன்புத் தலைவர் தனுஷ் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் ,விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் திரையரங்கை சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு தயாரிப்பாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது .