குஜராத்தில் குழந்தையின் தலை குக்கரில் மாட்டிக் கொண்டதை தொடர்ந்து பத்திரமாக அதை வெட்டி எடுத்து குழந்தையை காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் பவா நகரில் வசித்து வந்த ஒரு தம்பதியினருக்கு பிரியன்ஷி வாலா என்ற குழந்தை உள்ளது. பெற்றோர் வீட்டில் இருந்த நிலையில் அந்த குழந்தை கையில் குக்கரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக குழந்தையின் தலை குக்கருக்குள் மாட்டிக் கொண்டது.
இதனால் வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதுள்ளது, இதை கண்ட பெற்றோர் பதறிப்போய் உடனடியாக தலையில் சிக்கிய குக்கரை எடுக்க முயன்றனர், ஆனால் அவர்களால் அதனை எடுக்க முடியாததால், அக்கம் பக்கத்தினரை வரவழைத்து முயற்சி செய்து பார்த்தனர்.
அவர்களாலும் எடுக்க முடியாமல் போனதுடன் குழந்தையின் தலையில் காயங்களும் ஏற்பட்டது. இதனையெடுத்து பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் குழந்தைகள் நிபுணர் தொடங்கி எலும்பு சிகிச்சை நிபுணர் வரை பல்வேறு துறை மருத்துவர்கள் குழந்தையின் தலையில் சிக்கிய குக்கரை எடுக்க முயற்சி செய்து பார்த்தனர். அவர்களாலும் முடியாத நிலையில் பாத்திரங்கள் பழுது பார்ப்பவரை அழைத்து வந்து, குழந்தைக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் குக்கரை சாமர்த்தியமாக வெட்டி எடுத்தனர்.
அதன்பின் குழந்தைக்கு லேசான காயங்கள் இருந்ததால் மருத்துவமனையில் மருத்துவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் வீட்டில் உள்ள குழந்தைகளை பாதுகாப்புடன் பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது.