இந்திய மீனவர்கள் கேரள கடல் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இத்தாலி கப்பல் சென்றது. இந்த கப்பலில் இருந்த கடற்படை அதிகாரிகள் இந்திய மீனவர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் இத்தாலி கடற்படையைச் சேர்ந்த 2 வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 2 அதிகாரிகளும் சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டு சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இத்தாலி அரசு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியது. இந்நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் 15-ம் தேதி உயிரிழந்த 2 மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 கோடி ரூபாயும், மீதமுள்ள 2 கோடி ரூபாயை படகின் உரிமையாளருக்கும் வழங்குமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து படகில் இருந்த 7 மீனவர்களும், உயிரிந்தந்த மீனவர்களின் குடும்பத்தினரும் தங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது படகின் உரிமையாளருக்கு வழங்கப்பட்ட 2 கோடி ரூபாயில் பாதிக்கப்பட்ட 9 மீனவர்களுக்கும் தலா 5 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மீதமுள்ள ரூ. 1.55 கோடியை படகின் உரிமையாளருக்கு வழங்க வேண்டும் என நீதிபதி மறு உத்தரவு பிறப்பித்தார்.