ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி – ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் மோதுகின்றன .
11 அணிகள் பங்கேற்கும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையின் எஃப்சி அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி , ஒரு டிரா என தரவரிசையில் 7 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது .இதனிடையே நாளை நடைபெறும் 4-வது ஆட்டத்தில் சென்னையின் எப்.சி – ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இப்போட்டியில் சென்னை அணி 3-வது வெற்றியை ருசிக்குமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது .
இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஏ.டி.கே. மோகன் பகான் அணி 2 வெற்றி, 2 தோல்வி என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது .இதனால் இரு அணிகளும் 3-வது வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது .இப்போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதனிடையே இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.