மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த தச்சு தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதுகிராமம் பகுதியில் தச்சுத் தொழிலாளியான மாரியப்பன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மாரியப்பன் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மாரியப்பன் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளானது திடீரென நிலை தடுமாறியதால் அவர் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு மாரியப்பனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.