இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது சுழற்பந்து வீச்சின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் பி.கே என்று அழைக்கப்படும் பிரவீன்குமார்.
2007 சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான இவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பேங்க் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வெல்வதில் முக்கிய பங்காற்றியவர். தன்னுடைய துல்லியமான ஸ்விங் பந்து வீச்சின் மூலம் ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பொன்டிங் போன்ற ஜாம்பவான்களையும் மண்ணை கவ்வ செய்தவர்.
பிரவீன்குமார் திறமையான வீரராக இருந்தாலும் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாக வைத்திருந்தார் அவர். வலை பயிற்சியின் போது ரோகித் சர்மாவை கிண்டல் செய்த ரசிகர் ஒருவரை பிரவீன்குமார் ஸ்டெம்பை பிடிங்கி தாக்க முற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
2014 இல் இருந்து இந்திய அணியில் இடம் பெற முடியாமல் தவித்து வந்த அவ,ர் கடந்த ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தன்னுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றமும் தனிமையும் அவரை கடுமையான மன உளைச்சலுக்கு தள்ளியுள்ளது. ஒரு வாழ்ந்து கெட்ட மன்னனைப் போல தன்னைத் தானே தனிமைச்சிறையில் அடைத்துக்கொண்ட பிரவீன் குமார் தன்னுடைய பழைய பந்துவீச்சு வீடியோக்களை பார்த்தபடியே தனது நாட்களை கடத்தி உள்ளார்.
ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிரவீன்குமார் தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்து இருக்கின்றார். ஆனால் தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பார்த்த அவர் தற்கொலை முடிவை கைவிட்டு மனநல மருத்துவரை அணுகி யுள்ளார்.
தற்போது மன அழுத்தத்தில் இருந்து மீண்டு உள்ள பிரவீன் குமார் உத்தரப்பிரதேச ரஞ்சி கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ளார். மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளதாக கிளன் மேக்ஸ்வெல் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இப்பொழுது இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரும் இதுகுறித்து வெளிப்படையாக பேசியிருப்பது கிரிக்கெட் உலகை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.