இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,977 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 154 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 62 வது நாளாக அமலில் உள்ளது.
ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 10ம் இடத்தில் உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1, 38,845 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50,231 பேரும், தமிழகத்தில் 16,277 பேரும், குஜராத்தில் 14,056 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து டெல்லியில் 13,418 பேரும், ராஜஸ்தானில் 7,028 பேரும், மத்திய பிரதேசத்தில் 6,665 பேரும், உத்தரபிரதேசத்தில் 6,268 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்புகளின் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,021 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,635 பேரும், குஜராத்தில் 858 பேரும், மேற்குவங்கம் 272 பேரும், மத்திய பிரதேசத்தில் 290 பேரும், ராஜஸ்தானில் 163 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 57,721 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 77,103 ஆக உயர்ந்துள்ளது.