Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித் ஷா முன்னிலையில்…. அடுக்கு மொழியில் பேசிய ஓபிஎஸ் …!!

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடுக்கு மொழியில் பேசி அசத்தினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தில் மன்னனாக பதவி இருக்கின்ற பொழுது புரட்சித் தலைவர் அவர்கள் கூறுவார். நாம் இருக்கின்ற காலத்தில் மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அதனை செய்துவிட வேண்டும் என்று புரட்சித் தலைவர் அவர்கள் ஆணித்தரமாக கூறுவார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கூறிய அந்த சுந்தரச் சொற்களை தாரக மந்திரமாக கொண்டு ஏழை எளியோர் வாழ்வில் ஏற்றம் பெற எண்ணில்லா புதுமை திட்டங்களை நிறைவேற்றி காட்டியவர் நமது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் அந்த வைர வரிகளை இதயத்தில் ஏந்தி மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் இம்மியும் பிசகாது, நடந்து மக்களுக்கான நலத்திட்டங்களை அம்மா அவர்கள் அரசு இன்றைக்கு வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது என்பதற்கு சாட்சி தான் மாநில அரசு பெற்றுள்ள இத்தனை தேசிய அளவிலான விருதுகளும், பாராட்டுகளும்.

கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை மாண்புமிகு அம்மா அவர்களது அரசு அனைத்து துறைகளிலும் ஏராளமான சரித்திர சாதனைகளை படைத்து, தமிழக மக்களுடைய பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறது. அம்மாவின் அரசு கோடிக்கணக்கான தமிழக மக்களை நம்பி கழகத் தொண்டர்களின் மீது நம்பிக்கை வைத்து, மக்களுடன் பயணித்து, மக்களுக்கான நலத்திட்டங்களை தீட்டுவதில் இந்தியாவிலேயே முன்னிலையில் உள்ளது என்பதை நாம் நன்றாகவே அறிவோம்.

அதனால்தான் தமிழக மக்கள் இன்றும் எங்கள் பக்கம், நாங்கள் என்றும் மக்கள் பக்கம் என்பதனை இன்று நான் சுட்டிக்காட்ட கடமை பட்டு இருக்கின்றேன். இந்த சாதனைகளையெல்லாம் தமிழக மக்கள் பார்க்கிறார்கள், பாராட்டுகிறார்கள், மகிழ்ச்சியுடன் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியினரும் இதைப் பார்க்கிறார்கள். ஆனால் பரிதவிக்கிறார்கள்.

மாண்புமிகு அம்மாவின் அரசுக்கு தினந்தோறும் மக்கள் செல்வாக்கு கூடுகிறது என்று மனம் பதைபதைக்கிறார்கள். அதனால் மனம் பொறுக்க முடியாமல் குமுறுகிறார்கள், குறை சொல்கிறார்கள், குற்றம் சொல்கிறார்கள். இதையெல்லாம் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் வளர்த்த சிங்கங்கள் தான்… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள். சிங்கத்தின் குகையில் வந்து சிறுநரிகள் வாலாட்ட முடியாது.

எனவே தொடர்ந்து மூன்றாவது முறையும் நாங்கள் வெற்றி பெற்று முத்திரை பதிப்போம்,  வெற்றிக்கனியை பறிப்போம் என்பதனை இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்ற  அதே வேளையில் தேசிய அளவில் இந்தியாவை இன்றைக்கு வல்லரசு நாடாக உருவாக்கி காட்டுகின்ற மகிழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கின்ற நம்முடைய பாரத பிரதமர் மோடி ஜீ அவர்கள் இன்றைக்கு மிகவும் கடினமாக… இந்திய திருநாட்டை நல்வழிப்படுத்தி வருவதற்கு ஆற்றலுடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றார்.

இனி வருகின்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாரதிய ஜனதாவும் அந்த வெற்றிக் கூட்டணி தொடரும் என்பதனை இந்த கூட்டத்தில் மூலமாக தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன் என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Categories

Tech |