ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி சுமார் 5,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனை பகுதியில் இருக்கும் 47 ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோடனூர் ஊராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்த பணிகள் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பொன்ராஜ் ஆலிவர் அவர்களின் உத்தரவின்படி தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆலம்பாடி காந்தி ஊராட்சியில் உள்ள டி.கிளியூர், ஆலம்பாடி கிராமங்களில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டு அதனை பராமரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இப்பகுதியிலுள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் காய்கறி தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் ஊராட்சியில் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கோடனூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் நெல்லி, புளி, வேம்பு, புங்கை, வாகை என 5000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மரக் கன்றுகள் அனைத்தும் சுந்தரமுடையான் பழப்பண்ணை, போகலூர் தோட்டக்கலை பண்ணைகளில் இருந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.