காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் கார்த்தீசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்திரி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு கார்த்தீசனும் காயத்திரியும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு தற்போது முத்துமகாலெட்சுமி என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கார்த்தீசன் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை பெரியவர்கள் பேசி சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில் கார்தீசனுக்கும் காயத்திரிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் மனமுடைந்த காயத்திரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த கார்த்தீசனும், அவருடைய அண்ணன் முத்துசெல்வனும் காயத்திரியை மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக காயத்திரியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு காயத்திரியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருச்செந்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.