Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சின்னங்கள் குளறுபடியால் தேர்தல் ரத்து..!!

சின்னங்கள் குளறுபடியால் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வில்லிபத்திரி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ஆம் தேதி நடந்தது. முதல்கட்ட வாக்குப்பதிவில் 76.19 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, விருதுநகர், காரியாபட்டி, திருச்சுழி, சாத்தூர், நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. இதில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வில்லிபத்திரி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்களை விண்ணப்பங்களின் வரிசைப்படி ஒதுக்கீடு செய்யாமல் தவறுதலாக உள்ளது.

இதனால் வார்டு எண் 1, 3, 5, 6, 7, 8 ஆகிய வார்டுகளில் நடைபெறவுள்ள கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தலை மட்டும் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதையடுத்து மற்ற தேர்தல்களான மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சிமன்ற உறுப்பினர் ஆகியவற்றிற்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வில்லிபத்திரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் எந்த வித அசம்பாவிதங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது எனப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு கூடுதலான காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது இப்பகுதியில் சுமுகமான முறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது.

Categories

Tech |