கணவன் மனைவி எப்படி வாழவேண்டும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கணவன் மனைவி இருவரும் ஈகோவையும், சகிப்புத்தன்மையையும் காலணியாக கருதி வீட்டிற்கு வெளியே விட்டு விட வேண்டும். இல்லாவிட்டால் குழந்தைகள்தான் பாதிக்கப்படுவார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை செய்துள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் சசிகுமார் மீது குடும்ப வன்முறைத் தடைச் சட்டத்தின் கீழ் அவரின் மனைவி வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனைக் காரணமாகக் காட்டி சசிகுமாரை பணியிடை நீக்கம் செய்து கால்நடை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை மீண்டும் பெற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் மனைவி தன்னை துன்புறுத்தியதாகவும் விவாகரத்து உத்தரவு பிறப்பித்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு எதிராக குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் அவர் கூறினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் மனுதாரர் அவருக்கு விவாகரத்து வழங்கப்பட்ட நிலையில், தேவையில்லாமல் மனுதாரர் மீது குடும்ப வன்முறை சட்டப்பிரிவின் கீழ் வழக்கு தொடங்கப்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதி சசிகுமாரை பணி நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து, 15 நாட்களில் அவரை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவு விட்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி கணவன் மனைவி இருவரும் ஈகோவையும், சகிப்புதன்மையையும் காலனியாக கருதி வீட்டிற்கு வெளியில் விட்டுவிட வேண்டும். ஈகோவை விடாவிட்டால் குழந்தைகள் தான் பாதிக்கப்படுவார்கள். மேலும், திருமணம் என்பது ஒப்பந்தம் அல்ல. அது ஒரு சடங்கு. இதை தற்போதைய தலைமுறையினர் உணர்ந்து கொண்டு வாழ வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.