தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் ஆதரவற்ற நிலையில் வசித்துவந்தவர் தேவி (70) என்ற மூதாட்டி. இவருக்கு உறவினர் யாருமில்லாத நிலையில் அந்தப் பகுதியிலுள்ள வீடுகளில் யாசகம் பெற்று வாழ்ந்துவந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவர் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இருந்தும் நேற்று சிகிச்சைப் பலனின்றி இறந்தார். உறவினர் யாரும் இல்லாததால் அவருடைய சடலம் மருத்துவமனை பிணவறையிலிருந்து வந்தது.
ஆதரவற்ற மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள்
இந்நிலையில், அதிராம்பட்டினம் கிரசென்ட் ரத்த தான அமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் செய்யது அகமது கபீர் தலைமையில் இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் மூதாட்டியின் உடலைப் பெற்று, அவர் சார்ந்த இந்து மத முறைப்படி அடக்கம் செய்தனர். இச்சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் மனித நேயத்திற்கு சான்றாகவும் விளங்குவதாக அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.