ஹீரோ குழுமம் கொரோனா நிவாரண உதவிக்கு ரூ.100 கோடி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுடன், 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது இந்த வைரஸில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், அரசுக்கு உதவ நாட்டு மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். பிரதமரின் அந்தக் கோரிக்கையை ஏற்று பெரிய பெரிய நிறுவனங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உட்பட பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் ஹீரோ குழுமம் கொரோனா நிவாரண உதவிக்கு ரூ.100 கோடி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. பிரதமரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50கோடியும், மற்ற நிவாரண உதவிகளுக்கு ரூ.50 கோடியும் ஒதுக்கியுள்ளது.