Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவி ஏற்பு விழா… ஆறு முதலமைச்சர்கள், ஸ்டாலின் பங்கேற்பு..!!

ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராகப் பதவியேற்கும் விழாவில், ஆறு மாநில முதலமைச்சர்கள், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் முடிவுகள் டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆட்சி அமைப்பதற்கு 41 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 47 தொகுதிகளில் வென்றது. இதனைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்கவுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல் நாத், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஆகிய ஆறு முதலமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக தலைவர் ஸ்டாலின், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி பதவி ஏற்ற நிகழ்ச்சியில்தான் கடைசியாக பல எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து மோடிக்கு எதிராக திரண்டு நின்றனர். இந்நிலையில், இன்று நடைபெறவிருக்கும் ஹேமந்த் சோரனின் பதவியேற்பு விழா தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Categories

Tech |