ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்துடன் அவரது மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத் குடும்ப பொறுப்புகள் மட்டுமல்லாது ராணுவ நல பொறுப்புகளையும் ஏற்று இருந்தார். மேலும் இவர் ராணுவத்தினரின் மனைவிமார் நல சங்கம் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு தலைவராக இருந்து ராணுவ வீரர்களின் குடும்பத்து பெண்களின் நலனுக்காக பாடுபட்டவர் ஆவார். அந்த பெண்களுக்கு மதுலிகா ராவத் அழகுக்கலை, தையல், பின்னல் வேலை, கேக் மற்றும் சாக்லெட் தயாரித்தல் போன்ற பயிற்சிகளை வழங்கி ஊக்குவித்தார்.
இவர் தலைமை தாங்கிய தொண்டு நிறுவனம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் மதுலிகா ராணுவ வீரர் குடும்பத்து விதவைகள், மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கு நலஉதவி வழங்குதல் மற்றும் அதுகுறித்த பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். இவ்வாறு கணவர் ராணுவத்தை கட்டிக்காக்க ராணுவத்தினரின் குடும்பங்களை மதுலிகா காத்து வந்தார். இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் மதுலிகா உயிரிழந்து தனது பெயரையும் ராணுவத்தில் நிலைநிறுத்தி சென்றுவிட்டார்.