பாலஸ்தீனத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் வான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையில் எல்லைப் பிரச்சனை காரணமாக நீண்ட காலமாக மோதல் நடந்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தில் சர்ச்சைக்குரிய காசா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அந்த இயக்கம் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது. அந்த இயக்கத்தின் பயங்கரவாதிகளை அழிக்க இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலின் தெற்குப் பகுதியை குறிவைத்து 2 ராக்கெட் குண்டுகளை வீசினர்.
ஆனால் இஸ்ரேல் வான் பாதுகாப்பு படை அந்த ராக்கெட் குண்டுகளை வானில் நடுவழியில் மறித்து தாக்கி அழித்தனர். இதுதவிர வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ராட்சச பலூன்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லையில் பறக்க விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் வகையில், தெற்கு காசாவில் இருக்கின்ற ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹமாஸ் பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் உள்ளிட்டவற்றின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் கடுமையானவை. இஸ்ரேலிய மக்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களுக்கு எதிராக இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து செயல்படும்” என்று கூறியுள்ளது. அதேசமயத்தில் இஸ்ரேல் ராணுவத்தின் இத்தகைய தாக்குதலில் காசா பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.